செய்திகள்

ஏர் இந்தியா மேலாளரை கன்னத்தில் அறைந்த பெண் பயணி

Published On 2017-11-28 19:03 GMT   |   Update On 2017-11-28 19:03 GMT
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான நிறுவன மேலாளரை பெண் பயணி ஒருவர் கன்னத்தில் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான நிறுவன மேலாளரை பெண் பயணி ஒருவர் கன்னத்தில் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் அகமதாபாத் செல்வதற்காக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று வந்தார். அவர் வருவதற்கு தாமதமானதால் விமானம் புறப்பட்டு சென்றுவிட்டது.

இதனால் அந்த பெண் பயணி அங்கு பணியிலிருந்த ஏர் இந்தியா ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரு தரப்பினருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, விமான நிறுவன ஊழியர்கள் அந்த பெண்ணை ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியில் இருந்த மேலாளரிடம் அழைத்துச் சென்றனர். மேலாளர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அந்த பயணி சமாதானம் ஆகவில்லை.

ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த அந்த பெண் பயணி ஏர் இந்தியா மேலாளரை பளாரென கன்னத்தில் அறைந்தார். இதில் அந்த மேலாளரின் கண்ணாடி இரண்டாக உடைந்தது. அதன்பின் அங்கு போலீசார் வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News