செய்திகள்

தாஜ்மஹால் அருகே வாகன நிறுத்தம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் அனுமதி மறுப்பு

Published On 2017-11-20 09:31 GMT   |   Update On 2017-11-20 09:31 GMT
தாஜ்மஹால் அருகே உள்ள வாகன நிறுத்தங்களை அகற்ற வேண்டும் எனவும் புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி மறுத்தும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த மாதம் இரு நீதிபதிகள் பெஞ்சுக்கு விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், தாஜ்மஹாலை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் வாகன நிறுத்தங்களை அகற்றவேண்டும் என ஆக்ரா நகர நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கலாச்சார சின்னமான தாஜ்மஹாலை பாதுகாக்க வேண்டும் எனவும், நான்கு வாரங்களுக்குள் வாகன நிறுத்தங்கள் அகற்றப்பட வேண்டும் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், நீதிபதிகள் உத்தரவுக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநில அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வாகனங்களுக்கு பதிலாக சுற்றுலா பயணிகள் நடந்து செல்லலாம் என்று கூறிய நீதிபதிகள், வாகன நிறுத்தத்தை அகற்ற வேண்டும் எனவும் புதிய வாகன நிறுத்தங்கள் அமைக்க அனுமதி மறுப்பதாகவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறினர்.
Tags:    

Similar News