செய்திகள்

பஞ்சாப்: சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் 10 பேர் பலி

Published On 2017-11-08 14:44 GMT   |   Update On 2017-11-08 14:44 GMT
பஞ்சாப் மாநிலம் பதிந்தா நகரில் பழுதான பேருந்தில் இறங்கி சாலையில் நின்றவர்கள் மீது வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர்:

பஞ்சாப் மாநிலம் பதிந்தா நகரின் புச்சோ மாண்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை பேருந்து ஒன்றில் 30-க்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பேருந்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பழுதாகி நடுவழியில் நின்றது. இதையடுத்து, பேருந்தில் பயணித்தவர்கள் கீழே இறக்கி விடப்பட்டனர்.

பயணிகளை ஏற்றி செல்வதற்காக மற்றொரு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நடத்துனர் தெரிவித்ததை அடுத்து, அனைவரும் சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் கடும் பனிமூட்டம் நிறைந்திருந்தது.

இந்நிலையில், அந்த நெடுஞ்சாலையில் லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. பனிமூட்டத்தால் சாலையில் நின்றவர்கள் யாரும் தெரியவில்லை. இதனால் வேகமாக வந்த லாரி அங்கி நின்றிருந்தவர்கள் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். விபத்து ஏற்படுத்திய லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடும் பனிமூட்டம் காரணமாக சாலையில் நின்றவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News