செய்திகள்
பீகார் அருங்காட்சியகத்தை சுற்றி பார்த்த மோடி
பீகார் மாநிலம் பாட்னா பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, திடீரென அங்குள்ள அருங்காட்சியகத்துக்கு சென்று பார்வையிட்டார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் பாட்னா பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்றார். முதல் மந்திரி நிதிஷ்குமார் மோடிக்கு பூக்கள் கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.
பல்கலைக்கழக நூற்றாண்டு விழா முடிந்ததும் பாட்னாவில் உள்ள அருங்காட்சியகத்துக்கு செல்ல விரும்புவதாக பிரதமர் மோடி முதல் மந்திரி நிதிஷ்குமாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, முதல் மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில்குமார் உள்ளிட்ட பலர் பிரதமர் மோடியுடன் அருங்காட்சியகத்துக்கு சென்றனர்.
அருங்காட்சியகத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருள்களை பிரதமர் மோடி பார்வையிட்டார். அங்குள்ள அதிகாரிகளிடம் அவற்றின் சிறப்பை கேட்டறிந்தார்.
அதன்பின்னர், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் பதிவேட்டில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார். அந்த பதிவேட்டில் பிரதமர் மோடி எழுதுகையில், பீகார் மாநிலத்தின் வரலாறு மற்றும் கலாசாரத்தை சொல்லும் சிறப்பு வாய்ந்த இடமாக இது விளங்குகிறது என குறிப்பிட்டுள்ளார்.
முதல் மந்திரி நிதிஷ்குமாரின் முயற்சியில் சுமார் 500 கோடி ரூபாய் செலவில் பீகார் அருங்காட்சியகம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.