செய்திகள்

ஒடிசா: பழங்குடியின சிறுமி பாலியல் பலாத்காரம் - ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதி

Published On 2017-10-10 13:03 GMT   |   Update On 2017-10-10 13:03 GMT
ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த வனப்பகுதியில் பழங்குடியின சிறுமி நான்கு பேரால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புபனேஷ்பர்:

ஒடிசா மாநிலம் கோரபுத் மாவட்டம் சோரொஸ்பதார் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி அங்குள்ள உண்டு உறைவிட பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று அச்சிறுமி பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது நான்கு பேர் அச்சிறுமியை தூக்கிச் சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் அச்சிறுமி மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறுமியின் தந்தை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள்தான் தனது மகளை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினார்.

முழு சீருடையில் சிறுமியை வீரர்கள் தூக்கிச் சென்றதாக அந்த கிராம மக்களும் குற்றம் சாட்டினர். ஆனால், அவர்களது குற்றசாட்டை சி.ஆர்.பி.எப் மற்றும் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் மறுத்துள்ளனர். பலாத்காரம் செய்தவர்களை கைது செய்யக்கோரி கிராம மக்கள் ஜெயப்பூர் - விசாகப்பட்டினம் சாலையில் இன்று மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News