செய்திகள்

இளைஞர்கள் அரசியலுக்கு வரலாம் - திருமண விஷயத்தில் என்னை பின்பற்றக்கூடாது: அன்னா ஹசாரே அறிவுரை

Published On 2017-10-04 18:10 GMT   |   Update On 2017-10-04 18:10 GMT
இளைஞர்கள் அரசியலுக்கு வரலாம், ஆனால் திருமண விஷயத்தில் என்னை யாரும் பின்பற்ற கூடாது என அன்னா ஹசாரே அறிவுரை கூறியுள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அன்னா ஹசாரே கூறியதாவது:

இளைஞர்கள் யாரும் என்னை பின்பற்றி திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டாம்.  திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது சுலபமல்ல. இது கூர்மையான வாளின் மீது நடந்து செல்வதை விட கடினமானது. எனவே இளைஞர்கள் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ வேண்டும். தூய்மையான எண்ணங்களும், செயல்களும் இருக்க வேண்டும்.  இளைஞர்கள் அரசியலுக்கு வரலாம். ஆனால் திருமண விஷயத்தில் என்னை யாரும் பின்பற்றக்கூடாது. மிகப்பெரிய முனிவரான விஸ்வாமித்திரர் உலக வாழ்க்கை துறந்து ஆயிரம் ஆண்டுகள் தவம் இருந்தார். ஆனால் அவரை தேவலோகத்து மங்கையான மேனகை அழகில் மயங்கி விட்டார். மனம் என்பது அடிக்கடி மாறக்கூடியது ஆகும். அது மட்டுமன்றி கூர்மையான தந்திரம் கொண்டது.

நான் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை சமூகத்தின் வளர்ச்சிக்காகவே எனது வாழ்வை அர்ப்பணித்தேன். இதுவரை என் மீது எந்த களங்கமும் இல்லை. அப்படி இருந்தால் என்னை சுக்குநூறாக்கியிருப்பார்கள்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி அரசு நிறைவேற்றவில்லை. கருப்பு பணத்தை மீட்டு ஓவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்று கூறினார்கள். கருப்பு பணத்தை மற்ற நாடுகள் எப்படி மீட்டது என்பதை குறித்து அந்த நாடுகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் கருப்பு பணத்தை மீட்டு விடலாம்.

நீதித்துறையில் ஊழல் நிலவுகிறது இது மிகவும் ஆபத்தானது. நீதிமன்றங்களை நம்பி தான் நாடே இயங்கி வருகிறது நீதித்துறையிலேயே ஊழல் அதிகரித்தால் மக்களுக்கு எப்படி நீதி  கிடைக்கும்? என அவர் பேசினார்.

Tags:    

Similar News