செய்திகள்

விடுமுறை கால பயணத்தின்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு தினப்படி வெட்டு

Published On 2017-09-21 22:46 GMT   |   Update On 2017-09-21 22:46 GMT
விடுமுறை கால பயணத்தின்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு தினப்படி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

விடுமுறை கால பயணத்தின்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு தினப்படி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு, விதிமுறைகளுக்கு உட்பட்டு விடுமுறை கால பயண சலுகை வழங்கப்படுகிறது. இதைப்பயன்படுத்தி ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு, சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவது உண்டு. ஊழியர்களுக்கு அவர்களது பதவிக்கு ஏற்ற வகையில் தினப்படிகள் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கால பயணத்தின் போது தினப்படி வழங்கப்படமாட்டாது என அறிவித்து, இதற்கான உத்தரவு, பணியாளர் நலன், பயிற்சி துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் உள்ளூர் பயணங்களின்போது எந்தவிதமான வழிச்செலவுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரிமியம் ரெயில்கள், சுவிதா ரெயில்களில் பயணம் செய்தால் அல்லது தட்கல் டிக்கெட் வாங்கி பயணம் செய்தால் அதை அனுமதிக்கலாம். பயணத்துக்கு பின்னர் அப்படி செலவு செய்த பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.

ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரெயில்களில் உள்ள மாறுப்பட்ட கட்டணங்களும் விடுமுறை கால பயணச்சலுகையின்போது அனுமதிக்கப்படும்.

அதே நேரத்தில் தகுதியற்ற ஒருவர் விதிமுறைக்கு மாறாக விமானத்தில் பயணம் செய்துவிட்டு, இந்த ரெயில் கட்டணத்தை வழங்குமாறு கேட்டால் வழங்கப்பட மாட்டாது.

விடுமுறை கால பயண சலுகை திட்டத்தின்கீழ் மத்திய அரசின் ஊழியர்கள் செல்கிற இடத்துக்கு பஸ், ரெயில் போன்ற பொது போக்குவரத்து சாதனங்கள் இல்லாதபட்சத்தில், 100 கி.மீ. வரையிலான தனிப்பட்ட போக்குவரத்துக்கு (வாடகைக்காரில் பயணம் செய்தல் உள்ளிட்டவை) அனுமதி தரப்படும்.

7-வது சம்பள கமிஷன் செய்த பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு இந்த முடிவுகளை எடுத்துள்ளது.

மத்திய அரசின்கீழ் 49 லட்சத்து 26 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணியாற்றுவதும், அவர்கள் இந்த விடுமுறை கால பயண சலுகைa-யை அனுபவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News