செய்திகள்

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் நிறுவனங்களில் வருமான வரி சோதனை

Published On 2017-09-21 10:12 GMT   |   Update On 2017-09-21 10:12 GMT
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி சித்தார்தா வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பெங்களூரு:

கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா. முன்னாள் மத்திய மந்திரியாகவும், கவர்னராகவும் இருந்துள்ளார்.

84 வயதான இவர் சமீபத்தில் தான் காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்தார்.

எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி சித்தார்தா. இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை இன்று அதிரடி சோதனை நடத்தியது.

பெங்களூர், சென்னை, மும்பை, சிக்மங்களூர் ஆகிய நகரங்களில் உள்ள அவரது நிறுவனங்களில் 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

கர்நாடகா மற்றும் கோவா மண்டலங்களை சேர்ந்த மூத்த வருமானவரி துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். காலை 8.45 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சித்தார்தா மீதான வரி எய்ப்பு புகார் தொடர்பாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டனவா என்ற விவரம் தெரியவில்லை.

சமீபத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் மந்திரி சிவக்குமார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது பாரதிய ஜனதாவில் கடந்த மார்ச் மாதம் இணைந்த எஸ்.எம். கிருஷ்ணாவின் உறவினர் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News