செய்திகள்

மூளை அதிர்ச்சி: முன்னாள் மத்திய மந்திரி என்.டி.திவாரி மருத்துவமனையில் அனுமதி

Published On 2017-09-20 13:27 GMT   |   Update On 2017-09-20 13:27 GMT
முன்னாள் மத்திய மந்திரி என்.டி. திவாரிக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருடைய உடல் நிலை மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் இரு மாநிலங்களில் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் என்.டி.திவாரி. ஒருங்கிணைந்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக 3 முறையும், உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக ஒரு முறையும் என்.டி. திவாரி பதவி வகித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார்.

91 வயதாகும் என்.டி. திவாரி, தனது அரசியல் வாழ்க்கையில் பெரும் பகுதி காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தார். காங்கிரஸ் தலைவராக தற்போது பதவி வகிக்கும் சோனியா காந்தி முன்பு அரசியலில் ஈடுபடாமல் இருந்தபோது, காங்கிரஸ் தலைவராக நரசிம்ம ராவ் இருந்தார். அந்த காலகட்டத்தில், காங்கிரஸில் இருந்து என்.டி. திவாரி உள்ளிட்ட சில தலைவர்கள் தனியே சென்று புதிய அரசியல் கட்சியை (திவாரி காங்கிரஸ் கட்சி) ஆரம்பித்தனர்.



சிறிது கால இடைவெளிக்குப் பிறகு, காங்கிரஸில் மீண்டும் என்.டி. திவாரி உள்ளிட்டோர் இணைந்தனர். ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் ஆளுநராக கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலும் என்.டி. திவாரி இருந்தார். அப்போது அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அரசியலில் தீவிர கவனம் செலுத்தாமல் என்.டி. திவாரி இருந்து வந்தார். இவ்வருட தொடக்கத்தில் என்.டி திவாரி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தார்.

என்.டி. திவாரி இப்போது உடல் நிலை சரியில்லாமல் டெல்லி சாகெட் பகுதியில் உள்ள மாக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். என்.டி. திவாரிக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருடைய உடல் நிலை மோசமாக உள்ளது என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்ற. திவாரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags:    

Similar News