செய்திகள்

உள்துறை மந்திரியுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசர ஆலோசனை: நாளை சென்னை திரும்புகிறார்

Published On 2017-09-18 09:29 GMT   |   Update On 2017-09-18 09:29 GMT
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை அகற்றும் பணியை தொடங்கிவிட்டதாக டிடிவி தினகரன் தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில், அவருக்கு ஆதரவு அளித்து வந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதனை எதிர்த்து தினகரன் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க குறுக்கு வழியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் இன்று பிற்பகல், டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சட்டமன்றத்தில் 20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த ஆலோசனைக்குப் பின்னர், இன்று மாலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்து பேச உள்ளார்.

இதையடுத்து, ஆளுநர் வித்யாசாகத் ராவ் நாளை சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News