செய்திகள்

உ.பி.யில் 46 மதரசாக்களுக்கு வழங்கிய மானியத்தை நிறுத்தி வைத்தது அரசு

Published On 2017-09-13 16:11 GMT   |   Update On 2017-09-13 16:11 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 46 மதரசாக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் சுமார் 8,000க்கு மேற்பட்ட மதரசாக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 546 மதரசாக்கள் அரசு வழங்கும் மானியத்தை பெற்று வருகின்றன.

இதற்கிடையே, மதரசாக்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆன்லைனில் பதிவு செய்துள்ள மதரசாக்கள் குறித்து அரசு அதிகாரிகள் விசாரித்து தகவல்கள் உறுதி செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில், அரசு மானியம் பெறும் 46 மதரசாக்கள் முறைகேடுகளில் ஈடுபட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதை தொடர்ந்து அந்த மதரசாக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சில மதரசாக்கள் அரசு கேட்டுள்ள தகவல்களை முழுமையாக தரவில்லை. மேலும், சில மதரசாக்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. எனவே, முறைகேடுகளில் ஈடுபட்ட 46 மதரசாக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News