செய்திகள்

கோரக்பூர் துயர சம்பவம் குறித்த பிரதமரின் பேச்சுக்கு மாயாவதி கடும் கண்டனம்

Published On 2017-08-16 13:48 GMT   |   Update On 2017-08-16 13:48 GMT
கோரக்பூரில் நடந்த துயர சம்பவம் குறித்து, பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்த கருத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லக்னோ:

டெல்லி செங்கோட்டையில் நேற்று நடந்த 71-வது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘உத்தரப்பிரதேச மருத்துவமனையில் குழந்தைகள் இறந்தது, எல்லைப் பகுதியில் நீடிக்கும் சிக்கல் போன்ற பல
பிரச்சனைகளை கடந்து, சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழந்ததால் இந்த நாடே மன வேதனையில் உள்ளது’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கோரக்பூரில் நடந்த துயர சம்பவம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் நடந்த சம்பவம் மிகவும் துயரகரமானது. ஆனால் பிரதமர் மோடி, தனது சுதந்திர தின உரையில், இந்த சம்பவம் ஏதோ இயற்கை பேரிடரால் ஏற்பட்ட சம்பவம் போல்
குறிப்பிட்டுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.



மோடியைப் போலவே, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவும் பெங்களூரில் இதுபோன்ற கருத்தையே தெரிவித்துள்ளார்.

கோரக்பூர் துயர சம்பவம் தொடர்பான இவர்களது கருத்துக்களை மக்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இதிலிருந்தே அவர்களது தவறான சிந்தனைகளை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.

பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரே இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில், பிரதமரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் மற்றும் மந்திரிகள் மீது மத்திய அரசும், பா.ஜ.க. தேசிய தலைவரும் நடவடிக்கை எடுக்க தயங்கி வருகின்றனர். எனவே, அவர்களது இந்த நடவடிக்கைக்கு பகுஜன் சமாஜ் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் மத்திய அரசு, பா.ஜ.க.வின் மந்திரிகளை காப்பாற்றுவதற்காகவே லோக்பால் அமைப்பை உருவாக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News