செய்திகள்
ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையால் கணக்கில் வராத ரூ.1.75 லட்சம் கோடி பணம் சிக்கியது: பிரதமர் மோடி
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நடவடிக்கைக்கு பின்னர் கணக்கில் காட்டப்படாத ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள சொங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி உரையாற்றினார்.
அந்த உரையில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நடவடிக்கைக்கு பின்னர் கணக்கில் காட்டப்படாத ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும மோடி பேசுகையில், “பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கை மூலம் கணக்கில் வராத ரூ.3 லட்சம் கோடி ரொக்கம் வங்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 18 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் கணக்கில் காட்டப்படாத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டு அவை கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளது. அந்த வருமானத்தை எவ்வாறு சேர்த்தார்கள் என்பதை சொல்ல வேண்டியுள்ளது.
ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான கருப்பு பணம் வங்கிகளை அடைந்துள்ளது. இந்த நடவடிக்கையால் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்து 56 லட்சத்தை எட்டியுள்ளது. இது அரசாங்கத்தில் ஆய்வில் கிடைத்த தகவல் அல்ல. வெளியில் நிபுணர்கள் மூலம் கிடைத்தது.
ரூபாய் நோட்டு நடவடிக்கை மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. நாட்டையும், ஏழை மக்களையும் ஏமாற்றியவர்கள் தற்போது நிம்மதியாக தூங்க முடியவில்லை” என்றார்.