செய்திகள்

பிரதமர் மோடி பெயரில் நிறுவனம் தொடங்கி நன்கொடை வசூல்: சி.பி.ஐ. வழக்குப்பதிவு

Published On 2017-08-12 16:11 GMT   |   Update On 2017-08-12 16:11 GMT
பிரதமர் மோடியின் பெயரில் வீட்டு வசதி சங்கம் தொடங்கி, பொதுமக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டதாக கூறி அந்த நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.
புதுடெல்லி:

பிரதமர் மோடி வீட்டு வசதி திட்டங்களையும், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். இதனை பயன்படுத்தி பரீதாபாத்தைச் சேர்ந்த ஜே.பி.சிங் என்பவர் ‘நரேந்திர மோடி விசார் மஞ்ச்’ எனும் வீட்டு வசதி நிறுவனத்தை துவங்கியுள்ளார். அதற்காக ஒரு இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பிரதமரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் தலைவராக ஜே.பி.சிங் என்பவர் தனது புகைப்படத்துடன் காட்சியளிக்கிறார்.

ஆனால், அந்த நிறுவனம் மோடியின் பெயரில் நன்கொடை வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுபற்றி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

‘ஜே.பி.சிங்கின் நிறுவனத்துடன் பிரதமருக்கோ அவரது அலுவலகத்திற்கோ எவ்விதத் தொடர்பும் இல்லை. ஜே.பி.சிங் தனது நிறுவனத்தின் சார்பாக நன்கொடை வசூலிலும் ஈடுபட்டுள்ளார். இதற்கு அவர் பிரதமரின் பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளார்’ என சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜே.பி.சிங், அவருக்கு உதவியாக உள்ள அடையாளம் தெரியாத நபர்கள் மீது குற்றவியல் சதி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News