செய்திகள்

கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் மரணம்: மருத்துவக் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

Published On 2017-08-12 13:53 GMT   |   Update On 2017-08-12 13:53 GMT
கோரக்பூர் மருத்துமவனையில் அடுத்தடுத்து குழந்தைகள் மரணம் அடைந்த நிலையில், மருத்துவக்கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால், மூன்று நாட்களில் 35 குழந்தைகள் உயிரிழந்து உள்ளன. தொடர்ந்து ஐந்து நாட்களில் 60-க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

மாநிலத்தையே உலுக்கி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக சுகாதார மந்திரி தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மருத்துவமனையில் குழந்தைகள் இறந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில சுகாதார மந்திரி ஆகியோர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி வலியுறுத்தி உள்ளார்.

கோரக்பூர் மருத்துவமனைக்கு மத்திய சுகாதார துறை இணை மந்திரி அனுபிரியா பட்டேல் மற்றும் சுகாதார துறை செயலாளர் மிஷ்ரா ஆகியோர் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்ய உள்ளனர்.

இந்நிலையில், ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரியின் முதல்வரை உத்தர பிரதேச அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இதற்கிடையே முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், பிரதமரை தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து விளக்கி உள்ளார்.
Tags:    

Similar News