செய்திகள்

உ.பி. மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலியான கொடூரம் - நீதி விசாரணைக்கு உத்தரவு

Published On 2017-08-12 00:51 GMT   |   Update On 2017-08-12 03:26 GMT
உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 5 நாட்களில் 60 குழந்தைகள் உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூளை வீக்கம் ஏற்பட்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

முதலில், இரு நாட்களில் 30 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், 5 நாட்களில் 60 குழந்தைகள் பலியாகி உள்ளனர். கோரக்பூர் பகுதியில் மிகப்பெரிய மருத்துவமனையாக இருக்கும் பிஆர்டி மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட ஆக்ஸிஜனுக்கான கட்டணத் தொகை ரூ. 67 லட்சம் வழங்கப்படாததால் சப்ளை நிறுத்தப்பட்டதால் இந்த மரணம் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியானது. 

மாவட்ட கலெக்டர் ராஜீவ் ராவுத்லே இது குறித்து அவர் கூறுகையில், “கோரக்பூர் பிஆர்டி மருத்துவ கல்லூரியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக எந்த மரணமும் நிகழவில்லை. நேற்று மட்டும் தான் 7 பேர் உயிரிழந்தனர். அதுவும் பல்வேறு மருத்துவ காரணங்களுக்காக” என்றார். 

கோரக்பூர் தொகுதி உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் தொகுதியாகும். இரண்டு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்ட நாளில் மட்டும் 9 பேர் உயிரிழந்தனர்.

கோரக்பூரில் உள்ள அரசு சார்பில் இயங்கும் பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரியில் தான் கடந்த 5 நாட்களில் 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளது. ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி இந்த மரணங்கள் நடைபெற்று வந்துள்ளது. நேற்று முன் தினம் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 



60 குழந்தைககளை பலி கொண்ட இந்த கொடூர சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அரசு சார்பில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற காரணம் மறுக்கப்படுகிறது.

குழந்தைகளின் மரணம் துரதிருஷ்டவசமானது என்றும் குற்றம் இழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரபிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News