செய்திகள்

காஷ்மீருக்கு இன்னும் எத்தனை காலத்துக்கு சிறப்பு அந்தஸ்து? - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

Published On 2017-08-08 14:11 GMT   |   Update On 2017-08-08 14:11 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு இன்னும் எத்தனை காலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவீர்கள்? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
புதுடெல்லி:

காஷ்மீர் மாநிலத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதியுதவி உள்ளிட்ட சில சலுகைகளை அளித்து சிறப்பு அந்தஸ்து வழங்கி உள்ளது. இதற்கு எதிராக கடந்த 2014ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லி ஐகோர்ட்டை அணுகி தீர்வு காணுமாறு நீதிபதிகள் வலியுறுத்தியிருந்தனர். அங்கு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆனது.

இந்நிலையில், குமாரி விஜயலட்சுமி ஜா என்பவர், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகை இன்னும் எத்தனை காலத்திற்கு நீடிக்க வேண்டும்? என்ற கேள்வியுடன் சுப்ரீம் கோட்டில் மனு தாக்கல் செய்தார்.

‘காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-வது பிரிவின்கீழ் முந்தைய காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையால் தற்காலிக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1957-க்குப் பின்னர் அந்த அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டு இந்தியாவின் பொது அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் காஷ்மீர் மாநிலம் இணைத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கலைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையால் அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து தகுதி இன்னும் நீடிப்பது இந்தியாவின் பொது அரசியலமைப்பு சட்டத்திற்கு இழைக்கப்படும் மோசடியாகும்’ என தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

காஷ்மீரில் 1957ம் ஆண்டு அரசியலமைப்பு சபை கலைக்கப்பட்டபோது, அந்த சபையால் தற்காலிகமாக வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தும் காலாவதியாகிறது என மனுதாரர் குறிப்பிட்டுள்ள அம்சம் தொடர்பாக ஆய்வுசெய்த நீதிபதிகள், மனுதாரரின் கேள்விக்கு 4 வார காலத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News