செய்திகள்

மீராகுமாரை மாநிலங்களவை எம்.பி-யாக தேர்வு செய்ய காங்கிரஸ் திட்டம்

Published On 2017-07-25 23:38 GMT   |   Update On 2017-07-25 23:39 GMT
மேற்குவங்காளத்தில் இருந்து மீராகுமாரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
கொல்கத்தா:

மேற்குவங்காள மாநிலத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய ஜூலை 28 கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில், மேற்குவங்காளத்தில் இருந்து மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி முன் மொழிந்துள்ளது.

மேற்குவங்காள காங்கிரஸ் கட்சி முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு ஆதரவு தெரிவித்து இருந்தது. காங்கிரஸ் ஆதரவுடன் யெச்சூரியை நிறுத்த அவரது கட்சி எதிர்ப்பு தெரிவித்து விட்டது.

முன்னதாக, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மீராகுமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். தோல்வியை தழுவிய போதும் மீராகுமார்  பெருவாரியான வாக்குகளை பெற்றார்.

மேற்குவங்காள சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 44 எம்.எல்.ஏ-க்களும், இடதுசாரி முன்னணிக்கு 32 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு 211 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இதனிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏ மனாஸ் புனியா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவர் இந்த மாநிலங்களவை தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். புனியா கடந்த ஆண்டு செப்டம்பரில் தான் திரிணாமூல் கட்சியில் சேர்ந்தார்.
Tags:    

Similar News