செய்திகள்

வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்: துபாய் நிறுவன பெண் இயக்குனரின் காவல் நீட்டிப்பு

Published On 2017-07-21 16:03 GMT   |   Update On 2017-07-21 16:03 GMT
வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்ட துபாய் நிறுவன பெண் இயக்குனரின் அமலாக்கத்துறை காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்கு இங்கிலாந்தில் உள்ள அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க 2010-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.3600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி, விமானப்படை முன்னாள் தளபதி தியாகி உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், துபாயைச் சேர்ந்த யு.எச்.ஒய். மற்றும் மேட்ரிக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனங்களின் பெண் இயக்குனரான ஷிவானி சக்சேனாவை சென்னையில் கடந்த 17-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது.

விசாரணைக் காவல் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து ஷிவானி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஷிவானியிடம் மேலும் பல்வேறு ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் மேலும் 78 நாட்கள் காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஷிவானியின் உடல்நிலை சரியில்லாததால் காவலை நீட்டிக்கக்கூடாது என அவரது வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், ஏற்கனவே காவலில் எடுத்து விசாரித்தபோது மிகவும் மெதுவாக விசாரித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, ஷிவானியின் விசாரணைக் காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்த நீதிபதி, விசாரணையின்போது ஷிவானிக்கு போதிய மருத்துவ உதவிகளை வழங்கும்படி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News