செய்திகள்
சபரிமலை பக்தர்கள் வசதிக்காக செருவல்லி எஸ்டேட்டில் புதிய விமான நிலையம்: கேரள அரசு முடிவு
கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக செருவல்லி எஸ்டேட்டில் புதிய விமான நிலையம் அமைக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலைக்கு வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இந்த பக்தர்கள் வசதிக்காக விமான சேவை அளிக்கும் வகையில் இடத்தை தேர்வு செய்ய வருவாய் துறை செயலாளர் பி.ஹெச்.குரியன் தலைமையில் குழு ஒன்றை கேரள அரசு அமைத்தது. அந்த குழு சமீபத்தில் அரசுக்கு அறிக்கையை சமர்பித்தது. அதில், கோட்டயம் மாவட்டம் செருவல்லி எஸ்டேட்டில் புதிய விமான நிலையம் அமைக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பினாராய் விஜயன் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய விமான நிலையம் தொடர்பான பரிந்துரை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அந்த குழு அளித்த அறிக்கையின்படி, சபரிமலையில் இருந்து 48 கி.மீ தொலைவில் உள்ள எரிமேலி செருவல்லி ரப்பர் தோட்டம் அருகே உள்ள 2,263 ஏக்கர் பரப்பளவில் விமானம் நிலையம் அமைக்கும் பணிகளை தொடங்க முதல்-மந்திரி பினராய் விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விமானம் நிலையம் அமைக்க உள்ள இடம் பிலீவர்ஸ் சர்ச் எனும் திருச்சபைக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.