செய்திகள்

ஆந்திராவின் பழங்குடியினர் கிராமத்தில் 2 வாரங்களில் 15 பேர் பலி - உணவில் நச்சு காரணமா?

Published On 2017-06-27 00:13 GMT   |   Update On 2017-06-27 00:13 GMT
ஆந்திராவின் பழங்குடியினர் கிராமத்தில் வசித்து வந்த கிராமத்தினர் வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு கடந்த 2 வாரங்களில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜமகேந்திரவரம்:

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சவராயீ என்ற வனப்பகுதி கிராமம் உள்ளது. பழங்குடி மக்கள் வசித்து வரும் இங்கு கடந்த மாதம் 29-ந்தேதி ஒரு திருமண விழா நடந்தது. இதில் விருந்து சாப்பிட்ட அந்த கிராம மக்களுக்கு, சில நாட்களுக்குப்பின் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டன. அந்த உணவில் ஏதாவது நச்சு இருந்திருக்கலாம் என தெரிகிறது.

வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட கிராமத்தினர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 2 வாரங்களில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னும் 24 பேர் ராஜமகேந்திரவரம், காக்கிநாடா பகுதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் உயர்மட்ட மருத்துவக்குழு ஒன்றும் அந்த கிராமத்துக்கு விரைந்தது.

இதற்கிடையே மாவட்ட கலெக்டர் கார்த்திக்கேய மிஸ்ரா சவராயீ கிராமத்துக்கு சென்று ஆய்வு நடத்தியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும் அறிவித்தார். மேலும் துணை முதல்-மந்திரி சின்னராஜப்பாவும் அந்த கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். 
Tags:    

Similar News