செய்திகள்

ஜாலியன்வாலாபாக் நினைவு கிணற்றில் கிடந்த நாணயங்கள் திருட்டு

Published On 2017-06-21 22:52 GMT   |   Update On 2017-06-21 22:52 GMT
ஜாலியன்வாலாபாக் நினைவு கிணற்றுக்குள் இருந்த பழைய நாணயங்களை கொள்ளையர்கள் திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில் சுதந்திரத்திற்காக போராடியவர்களை கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந்தேதி ஆங்கிலேய படையினர் சுட்டுக்கொன்றனர். ஜாலியன்வாலாபாக் படுகொலை என்று கூறப்படும் இந்த சம்பவம் நடந்த இடம், நினைவிடமாக திகழ்கிறது.

துப்பாக்கி சூடு நடந்தபோது சுதந்திர போராட்ட தியாகிகளில் சிலர் இங்குள்ள கிணற்றில் குதித்து உயிர் இழந்தனர். 15 அடி ஆழம் உள்ள இந்த கிணறும் நினைவிடமாக திகழ்கிறது.

கிணற்றை பார்வையிடும் சுற்றுலா பயணிகள், அதில் தங்களால் இயன்ற பணத்தை (பெரும்பாலும் நாணயங்களாக) கிணற்றுக்குள் வீசிச்செல்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இந்த கிணறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. கிணற்றை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நினைவிடத்திற்குள் புகுந்த திருடர்கள், கம்பி வேலியை உடைத்து கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினர். அங்கிருந்த 3 ஆயிரம் பணத்தை திருடிச்சென்று விட்டனர்.

சம்பவம் தொடர்பாக கொள்ளையன் ஒருவன் போலீசில் சிக்கியுள்ளான். அவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News