செய்திகள்

வங்கி கடனுக்காக வீடு ஜப்தி: ஏழை பெண்ணுக்கு நடிகர் சுரேஷ்கோபி ஆதரவு

Published On 2017-06-20 11:37 GMT   |   Update On 2017-06-20 11:37 GMT
திருவனந்தபுரம் அருகே வங்கி கடன் செலுத்த முடியாத ஏழை பெண்ணுக்கு நடிகரும், எம்.பியுமான சுரேஷ் கோபி நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் அருகே காட்டாக்கடை பகுதியைச் சேர்ந்தவர் உஷா. இவர் கணவர் இறந்து விட்டதால் தனது 2 மகள்களுடன் வசித்து வருகிறார்.

ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இவர் வங்கியில் கடன் வாங்கி ஒரு சிறிய வீடு கட்டி இருந்தார். ஆனால் அவருக்கு போதிய வருமானம் இல்லாததால் அவரால் வங்கி கடனை முறையாக கட்ட முடியவில்லை.

இதனால் வங்கியில் இருந்து பலமுறை அவருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. அதன்பிறகு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அந்த பெண்ணின் வீடு ஜப்தி செய்யப்பட்டது. இதனால் உஷா தனது 2 மகள்களுடன் நடுரோட்டில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நடிகர் சுரேஷ் கோபி எம்.பி. நேரில் சென்று அந்த ஏழை பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்தார். அந்த பெண்ணின் குடும்ப சூழ்நிலையையும் அவர் கேட்டறிந்தார். இதுபற்றி சுரேஷ்கோபி கூறியதாவது:-

வங்கியின் மனிதாபி மானமற்ற நடவடிக்கை காரணமாக ஒரு ஏழைப் பெண் தனது மகள்களுடன் நடுரோட்டுக்கு வந்து விட்டார். அவருக்கு மாற்று வீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழைப் பெண்ணை இவ்வாறு வீட்டை விட்டு வெளியேற்றியது தவறு. இதற்கு முழு பொறுப்பையும் அரசு தான் ஏற்க வேண்டும். இந்த பெண்ணுக்கு அரசு உதவி செய்யாவிட்டால் பாரதிய ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News