செய்திகள்

கெஜ்ரிவால் பற்றிய ஆவண படம் வெளியாவதில் சிக்கல்

Published On 2017-05-28 00:09 GMT   |   Update On 2017-05-28 00:09 GMT
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பற்றிய ஆவண படம் வெளியாவத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து அடுத்த கட்டமாக ஆலோசனை செய்வோம் என இயக்குனர் குஷ்பு ரங்கா தெரிவித்தார்.
புதுடெல்லி:

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அரசியலுக்கு வரும் முன்பு சமூக சேவகராக இருந்தவர். அரசியலில் அவருடைய வேகமான வளர்ச்சி குறித்து டைரக்டர்கள் குஷ்பு ரங்கா, வினய் சுக்லா இருவரும் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘ஆன் இன்சிக்னிபிகன்ட் மேன்’ (முக்கியமில்லாத ஒரு மனிதர்) என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை இயக்கி உள்ளனர்.

தற்போது இந்த ஆவணப்படம் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் பிடியில் சிக்கி உள்ளது. படத்தில் சில இடங்களில் பா.ஜனதா, காங்கிரஸ் பற்றிய விமர்சனங்களும் வருகின்றன. இவற்றை தணிக்கை வாரியத்தினர் நீக்கும்படி கூறி படத்தின் இயக்குனர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஆனால் இதற்கு இயக்குனர்கள் மறுத்து வருவதால் படத்தை இந்தியாவில் திரையிடுவதற்கான சான்றிதழை அளிக்காமல் தணிக்கை வாரியம் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுபற்றி இயக்குனர் குஷ்பு ரங்கா கூறுகையில், “படத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒருவர் எப்படி திடீரென அரசியலில் குதித்து சாதித்தார் என்பது பற்றி மட்டுமே கூறி இருக்கிறோம். தணிக்கை வாரியம் இதில் அரசியல் கட்சிகளை பாதுகாப்பதில் அர்த்தமில்லை. இப்பிரச்சினையில் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து எங்களது வக்கீல்களுடன் ஆலோசனை செய்வோம்” என்றார்.

இந்த ஆவணப்படம் ஏற்கனவே டோரண்டோ சர்வதேச படவிழா உள்ளிட்ட பல பட விழாக்களில் திரையிடப்பட்டு விட்டது, குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News