செய்திகள்

நெட் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும்: பல்கலைக்கழக மானியக்குழு தகவல்

Published On 2017-04-27 02:23 GMT   |   Update On 2017-04-27 02:23 GMT
இளநிலை ஆராய்ச்சியாளர், உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் எனவும் இந்த தேர்வை சி.பி.எஸ்.இ., நடத்தும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு நேற்று தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இளநிலை ஆராய்ச்சியாளர், உதவி பேராசிரியர் பணி தகுதி பெற விரும்புவோருக்கு, ‘நெட்’ என்னும் தேசிய தகுதித்தேர்வு ஆண்டுதோறும் ஜூலை மாதமும், டிசம்பர் மாதமும் நடத்தப்படுகிறது.

ஆனால் பணி நெருக்கடி காரணமாக இந்த தேர்வை தம்மால் நடத்த முடியாது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தை சி.பி.எஸ்.இ., கடந்த ஆண்டு அணுகி தெரிவித்தது.


இதன்காரணமாக ‘நெட்’ தேர்வு இந்த ஆண்டு நடத்தப்படுவது பற்றி நிச்சயமற்ற தன்மை நிலவி வந்தது.

இந்த நிலையில் வழக்கத்தின்படியே இந்த ஆண்டும் ஜூலை மாதம் நெட் தேர்வு நடைபெறும், இந்த தேர்வை சி.பி.எஸ்.இ., நடத்தும் என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நேற்று தெரிவித்துள்ளது.

என்.டி.எஸ். என்னும் தேசிய தேர்வு பணி மையத்தை மத்திய அரசு அமைக்கிற வரையில், இந்த ஏற்பாடு தொடரும் என தகவல்கள் கூறுகின்றன.

மேலும், ‘நெட்’ தேர்வு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சி.பி.எஸ்.இ. வெளியிடும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு கூறியுள்ளது. 

Similar News