செய்திகள்

சோனியாவுடன் இந்திய கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா சந்திப்பு

Published On 2017-04-24 23:18 GMT   |   Update On 2017-04-24 23:18 GMT
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். அவர்களுடன் ஜூலை மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தல் பற்றி தீவிர ஆலோசனையும் நடத்தினார்.

இந்தநிலையில் சோனியா காந்தியை டெல்லியில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. இரு தலைவர்களும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.

அப்போது, மதசார்பற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்ககூடிய ஒரு வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவதற்குரிய வாய்ப்பு குறித்து இருவரும் பேசினர். எனினும் வேட்பாளராக நிறுத்தப்படக் கூடியவர்கள் பற்றி இரு தலைவர்களும் எந்த ஆலோசனையிலும் ஈடுபடவில்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சோனியாகாந்தியை அண்மையில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், மார்க்சிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து பேசியதும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து வேட்பாளரை நிறுத்துவது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பதும் நினைவு கூரத்தக்கது. 

Similar News