செய்திகள்

பீகார்: லாரி மீது சிறை வாகனம் மோதல்- மாவோயிஸ்ட் கைதி, 7 போலீசார் பலி

Published On 2017-04-15 07:24 GMT   |   Update On 2017-04-15 07:24 GMT
பீகார் மாநிலத்தில் லாரி மீது வேகமாக வந்த சிறை வாகனம் மோதிய விபத்தில் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்ற மாவோயிஸ்ட் கைதி மற்றும் அவருக்கு பாதுகாவலர்களாக சென்ற 7 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாட்னா:

பீகார் மாநிலம் சித்தாமரி மாவட்டத்தில் உள்ள பாகல்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இருவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக சிறை காவலர்கள் நேற்று ஒரு வாகனத்தில் அழைத்து சென்றனர். கைதிகளுக்கு பாதுகாவலாக 11 போலீசார் உடன் சென்றனர்.

கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் சிறைச்சாலையை நோக்கி சித்தாமாரி-முசாபர்பூர் சாலை வழியாக படுவேகமாக வந்த சிறை வாகனம், திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரியின்மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் மிக முக்கியமான மாவோயிஸ்ட் தீவிரவாதியாக கருதப்படும் சோஹக் பஸ்வான் மற்றும் 7 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


காயமடைந்த ஒரு மாவோயிஸ்ட் கைதி மற்றும் சில போலீசார் முசாபர்நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News