செய்திகள்

21 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்

Published On 2017-03-27 16:25 GMT   |   Update On 2017-03-27 16:25 GMT
டெல்லியில் ஆதாயம் தரும் பதவி தொடர்பாக, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீதான வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தேர்தல் ஆணையம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
டெல்லி மாநில முதல்–மந்திரி கெஜ்ரிவால் தனது கட்சி (ஆம் ஆத்மி) எம்.எல்.ஏ.க்கள் 21 பேரை கடந்த 2015-ம் ஆண்டு சட்டசபை செயலாளர்களாக நியமித்தார். இது மாநில மந்திரி பதவிக்கு இணையானது.

எம்.எல்.ஏ.வாக இருந்துகொண்டே அரசின் இன்னொரு பதவியையும் வகிப்பது இரட்டை ஆதாயம் பெறுவதாகும் என்று பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. எனவே, இவர்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரி போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

கெஜ்ரிவால் அரசு தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் விதமாக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாவை ஜனாதிபதி நிராகரித்து விட்டார். எனவே, 21 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்படும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த நியமனம் தொடர்பான புகாரின் அடிப்படையில் 21 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடமும் தலைமை தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை இன்றுடன் முடிவடைந்த நிலையில், தீர்ப்பினை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

Similar News