செய்திகள்

விவசாயி நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் ரெயிலை ஜப்தி செய்ய உத்தரவு

Published On 2017-03-18 23:49 GMT   |   Update On 2017-03-18 23:49 GMT
அமிர்தசரஸ்-டெல்லி இடையே ஓடுகிற சுவர்ண சதாப்தி ரெயிலை ஜப்தி செய்யுமாறு கடந்த புதன்கிழமை லூதியானா கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது.
லூதியானா:

பஞ்சாப் மாநிலம், கதானா என்ற கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி, சம்பூ-ரண் சிங். ரெயில் பாதைகள் அமைப்பதற்காக இவரது நிலத்தை ரெயில்வே கையகப்படுத்தியது. அதற்காக ரெயில்வே ரூ.37 லட்சம் இழப்பீடு வழங்கியது. ஆனால் அது போதாது என கூறி அவர் கோர்ட்டை நாடினார்.

அதைத்தொடர்ந்து கூடுதல் இழப்பீடு வழங்க லூதியானா கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு 2005-ம் ஆண்டு உத்தரவிட்டது. இருப்பினும் அதன்படி ரெயில்வே அவருக்கு ரூ.1 கோடியே 5 லட்சம் இழப்பீடு வழங்கவில்லை.

இதையடுத்து சம்பூரண்சிங், மீண்டும் கோர்ட்டை நாடினார். இதையடுத்து அமிர்தசரஸ்-டெல்லி இடையே ஓடுகிற சுவர்ண சதாப்தி ரெயிலை ஜப்தி செய்யுமாறு கடந்த புதன்கிழமை லூதியானா கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது. லூதியானா ரெயில் நிலைய சூப்பிரண்டின் ஒரு அறையையும் ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது.

பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு இழப்பீடு தருவதற்காக ரெயிலை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டிருப்பது இதுவரை நடந்திராத ஒன்று என்று கூறப்படுகிறது. 

Similar News