செய்திகள்

மணிப்பூரில் பா.ஜ.க. அலுவலகத்தை சூறையாடிய மாணவர்கள்

Published On 2017-03-01 14:13 GMT   |   Update On 2017-03-01 14:13 GMT
மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க. அலுவலகத்தை மாணவர்கள் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்பால்:

மணிப்பூர் சட்டமன்ற முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. 60 தொகுதிகளுக்கான இத்தேர்தல் மார்ச் 4 மற்றும் மார்ச் 8 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், மணிப்பூரை சேர்ந்த கே.எஸ்.ஏ. என்ற மாணவர் அமைப்பு, இம்பாலில் உள்ள பா.ஜ.க. கட்சி அலுவலகத்தை இன்று சூறையாடியது. முன்னதாக மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள் பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க வேண்டுமென்று அலுவலகத்தின் கேட் அருகே நின்று கொண்டு அனுமதி கேட்டுள்ளனர்.

ஆனால் தலைவர்கள் யாரும் மாணவர்களுடன் பேச முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து உள்ளே நுழைந்த மாணவர்கள் அலுவலகத்தின் பர்னிச்சர்கள், கண்ணாடிகள் ஆகியவற்றை உடைத்தெறிந்தனர். பின்னர் கோஷமிட்டபடி அவ்விடத்தை விட்டு அவர்கள் வெளியேறினர்.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மணிப்பூரில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியதாக இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மணிப்பூர் போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News