செய்திகள்

ரம்ஜாஸ் கல்லூரி கலவரம்: டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது மனித உரிமை ஆணையம்

Published On 2017-02-28 14:26 GMT   |   Update On 2017-02-28 14:26 GMT
டெல்லி ரம்ஜாஸ் கல்லூரியில் சமீபத்தில் நடந்த கலவரம் குறித்து விளக்கம் அளிக்கும்படி டெல்லி காவல்துறைக்கு தேசிய மனித உரிமைகள் ஆனையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி:

டெல்லி ராம்ஜாஸ் கல்லூரியில் பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற்ற கருந்தரங்க நிகழ்வில், கடந்த ஆண்டு தேச விரோத குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைகழக ஆய்வு மாணவரும், மாணவ செயற்பாட்டாளருமான உமர் காலித் பேச்சாளராக கலந்துகொள்வதாக இருந்தது.

ஆனால் உமர் காலித் கலந்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏபிவிபி (அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ) மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் எதிர்ப்பின் காரணமாக கருத்தரங்க நிகழ்வில் உமர் காலித் பங்கேற்பது ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து அனைத்திந்திய மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் கல்லூரி நிர்வாகம் ஏபிவிபிக்கு அடிபணிந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.

கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டபோது, காவல்துறையின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. போலீசார் அத்துமீறி நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில், டெல்லி ராம்ஜாஸ் கல்லூரியில் பிப்.22ல் நடந்த கலவரம் குறித்தும், அத்துமீறல் புகார் குறித்தும்  விளக்கம் அளிக்கும்படி டெல்லி காவல்துறைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


மாணவி ஒருவரை போலீசார் தாக்கியதுடன், பத்திரிகையாளர்களிடம் கேமராக்களை பறித்தது தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

Similar News