செய்திகள்

மருத்துவ மாணவியை கற்பழித்து செல்போனில் படம் பிடித்த 4 பேர் கைது

Published On 2017-02-22 03:50 GMT   |   Update On 2017-02-22 03:50 GMT
கர்நாடகாவில், நண்பருடன் வனப்பகுதிக்கு சென்ற மருத்துவ மாணவியை ஒரு கும்பல் கற்பழித்து செல்போனில் வீடியோ படம் பிடித்தது. இது குறித்து 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் தார்வார் டவுன் பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய மைனர் பெண், பெலகாவி மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் டாக்டருக்கு படித்து வருகிறார். கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் அவர் தங்கி இருக்கிறார். இந்த நிலையில், அவர் தனது நண்பருடன் பெலகாவி அருகே காகதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கு இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், மருத்துவ மாணவியை கேலி செய்ததாக கூறப்படுகிறது. அதுபற்றி அந்த மர்மநபர்களிடம் மாணவியின் நண்பர் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மாணவியின் நண்பரை தாக்கி அவரிடம் இருந்த பணம், செல்போனை கொள்ளையடித்தனர்.

அதன்பிறகு, மாணவியை அவர்கள் கற்பழித்ததாகவும், அதை செல்போனில் வீடியோ படம்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர். மாணவி பெலகாவியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, மாணவியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு மர்மநபர்கள் பணம் கேட்டு மிரட்டினர். பணம் தராவிட்டால் மாணவியை கற்பழித்தபோது எடுத்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம் எனவும் மிரட்டல் விடுத்தனர்.

இதுபற்றி காகதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியை கற்பழித்தவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவியை நேற்று பெலகாவி துணை போலீஸ் கமிஷனர் ராதிகா மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சந்தித்து விசாரணை நடத்தினர். மேலும் நடந்த சம்பவங்கள் பற்றியும், மர்மநபர்கள் குறித்தும் மாணவியிடம் கேட்டு அறிந்தனர்.

இந்த நிலையில், மாணவியை கற்பழித்ததாக 4 பேரை காகதி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மாணவியின் நண்பரிடம் கொள்ளையடித்த செல்போன், பணம் ஆகியவற்றையும் போலீசார் மீட்டனர். அந்த 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடிவருகின்றனர். மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News