செய்திகள்

மலப்புரம் அருகே ரூ.1½ கோடி ஹவாலா பணம் சிக்கியது

Published On 2017-02-07 04:15 GMT   |   Update On 2017-02-07 04:15 GMT
கேரள மாநிலம் மலப்புரம் அருகே ரூ.1½ கோடி ஹவாலா பணம் சிக்கியது. பணம் கடத்தியதாக 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா டி.எஸ்.பி. மோகன சந்திரனுக்கு ரூ.1½ கோடி ஹவாலா பணம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி இன்ஸ்பெக்டர் வேலாயுதனுக்கு அவர் உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் வேலாயுதன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை பெருந்தல்மன்னா பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி 2 பேர் நின்றனர். அவர்களை விசாரிக்க முயன்றபோது அவர்கள் தப்பி ஓடினர்.

உஷாரான போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் ரூ.1½ கோடி இருந்தன.

இது குறித்து அவர்களிடம் கேட்டபோது அவர்கள் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. உரிய ஆவணங்களும் இல்லை. இதனால் பிடிபட்ட பணம் ஹவாலா பணம் என்று தெரியவந்தது.

விசாரணையில் ஹவாலா பணம் கடத்தியவர்கள் பாலச்சேரியை சேர்ந்த சர்புதீன் (வயது 40), ஹரிப் (38) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News