செய்திகள்

ஒடிசாவில் அமரர் ஊர்தி கிடைக்காததால் பிணத்தை தோளில் சுமந்து 15 கி.மீ. நடந்த தந்தை

Published On 2017-01-07 04:05 GMT   |   Update On 2017-01-07 04:05 GMT
ஒடிசாவில் மாநிலத்தில் அமரர் ஊர்தி கிடைக்காததால் உயிரிழந்த ஐந்து வயது மகளின் பிணத்தை தோளில் சுமந்தபடி, ஒருவர் 15 கிலோமீட்டர் தூரம் தனது வீட்டுக்கு நடந்துவந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தின் கலாஹன்டி மாவட்டத்தில் மனைவியின் பிரேதத்தை சொந்த ஊருக்கு கொண்டுசெல்ல முடியாததால் கொட்டும் மழையில் தானா மாஜி என்பவர் சுமார் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு அந்தப் பிணத்தை தோளில் சுமந்து சென்ற செய்தி கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த சோகம் அடங்கும் முன்னர், இதே ஒடிசா மாநிலத்தில் மேலும் ஒரு பெருஞ்சோகம் அரங்கேறியுள்ளது.

இங்குள்ள அன்குல் மாவட்டத்தை சேர்ந்த கட்டி திபார் என்பவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது ஐந்து வயது மகள் சுமி-யை பலஹரா சுகாதார மைய ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 4-ம் தேதி அந்த சிறுமி உயிரிழந்தாள். ஆனால், மகளின் பிரேதத்தை தனியார் வாகனத்தில் ஏற்றி சொந்த ஊருக்கு கொண்டுசெல்ல பொருளாதார வசதி இல்லாததாலும், அரசின் இலவச அமரர் ஊர்தி வசதி செய்து தரப்படாததாலும், 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தனது வீட்டுக்கு மகளின் பிரேதத்தை தோளில் சுமந்தபடி கட்டி திபார் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வைரலாக பரவத் தொடங்கின.

இதையடுத்து, பலஹரா சுகாதார மைய மேலாளர் மற்றும் காவலரை சஸ்பெண்ட் செய்து அன்குல் மாவட்ட கலெக்டர் அனில் குமார் சமால் உத்தரவிட்டுள்ளார்.

Similar News