செய்திகள்

ரூபாய் நோட்டு விவகாரம்: பிரியங்காவை முன்நிறுத்தி காங்கிரஸ் போராட திட்டம்

Published On 2016-12-26 04:52 GMT   |   Update On 2016-12-26 04:52 GMT
ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரியங்காவை முன்னிறுத்தி போராட்டத்தை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் உத்தரபிரதேச தேர்தலில் சாதகமாக சூழ்நிலை ஏற்படும் என காங்கிரஸ் கருதுகிறது.
புதுடெல்லி:

ரூபாய் நோட்டு பிரச்சினை நாடு முழுவதும் பொதுமக்களை கடுமையாக பாதித்து இருப்பதால் இந்த பிரச்சினையை கையில் எடுத்து காங்கிரஸ் தீவிரமாக போராட திட்டமிட்டுள்ளது.

இதுசம்பந்தமாக நாளை கட்சி நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்துகிறார்கள். அதில் எந்த வகையான போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட உள்ளது.

பிரியங்காவை முன்னிறுத்தி இந்த போராட்டத்தை பெரிய அளவில் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் உத்தரபிரதேச தேர்தலில் சாதகமாக சூழ்நிலை ஏற்படும் என காங்கிரஸ் கருதுகிறது.

உத்தரபிரதேச தேர்தலுக்காக ஏற்கனவே ராகுல்காந்தி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டார். அடுத்ததாக ரூபாய் நோட்டு பிரச்சினையை கையில் எடுத்து பிரியங்காவை உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்த வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதில் அவர் பங்கேற்றால் காங்கிரசின் செல்வாக்கு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் பிரியங்காவை கட்சியில் இன்னும் தீவிரமாக ஈடுபட வைக்க அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூபாய் நோட்டு பிரச்சினை முதலில் வெளிவந்தபோது, காங்கிரசுடன் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தன. ராகுல்காந்தி நடத்திய கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்று எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால் பின்னர் அந்த அணியில் பிளவு ஏற்பட்டது. இப்போது மீண்டும் அனைத்து கட்சிகளையும் ஒரே அணியில் திரட்டும் முயற்சியிலும் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

மோடி ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்து 50 நாட்கள் முடியபோகிறது. இதனால் பெரிய போராட்டத்தை மற்ற கட்சிகளோடு ஒன்று சேர்ந்து நடத்துவதற்கு காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது.

Similar News