செய்திகள்

பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ராஜ்நாத் சிங் கியூபா பயணம்

Published On 2016-11-28 08:21 GMT   |   Update On 2016-11-28 08:21 GMT
கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.
புதுடெல்லி:

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ நேற்று முன்தினம் தனது 90 வது வயதில் மரணம் அடைந்தார்.

பிடல் காஸ்ட்ரோவின் விருப்பத்துக்கிணங்க, அவர் இறந்த சில மணிநேரங்களுக்குள் உடல் தகனம் செய்யப்பட்டது.

பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது சாம்பல் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது சாம்பல் ஹவானா நகரில் உள்ள கல்லறையில் வரும் டிசம்பர் மாதம் 4-ம் தேதி அடக்கம் செய்யப்படவுள்ளது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட இந்தியாவின் அரசியில் தலைவர்கள் மற்றும் உலகில் உள்ள முக்கிய தலைவர்கள் பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கியூபாவில் 9 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், கியூபா தலைநகர் ஹவானாவில் வரும் டிசம்பர் மாதம் 4-ம் தேதி நடைபெறும் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்திய குழுவினர் கியூபா நாட்டுக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, இதுபோன்ற உலகநாடுகளின் பெருந்தலைவர்களின் இறுதிச் சடங்குகளில் ஒரு நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ, வெளியுறவுத்துறை மந்திரியோ பங்கேற்பது மரபாக உள்ளது.

வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளதால், அவருக்கு மாற்றாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கியூபா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்நாத் சிங்குடன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இடது கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும் நாளை புதுடெல்லியில் இருந்து ஹவானா நகருக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.

Similar News