ரூ.500, ரூ.1000 செல்லாது ரூபாய் நோட்டுகளை ஒழிக்க ரிசர்வ் வங்கிதான் சிபாரிசு: ரவிசங்கர் பிரசாத்
புதுடெல்லி:
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டு செல்லாது என்பதை ரிசர்வ் வங்கிதான் அறிவிக்க வேண்டும் என்றும், மோடி அரசு ரிசர்வ் வங்கியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறது என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இதற்கு மத்திய சட்ட மற்றும் தகவல் தொழில் நுட்ப மந்திரி ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்து உள்ளார். ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் தான் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது பற்றி பல்வேறு தவறான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்ததன் பேரில் தான் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு முடிவு செய்து அறிவித்தது.
கருப்பு பணத்தை ஒழிப்பது தான் எங்களது முக்கியமான நோக்கம். மோடியின் முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே கருப்பு பணத்தை ஒழிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் தானாக முன் வந்து பண விவரத்தை தெரிவிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. அதன் இறுதி கட்ட நடவடிக்கைதான் ரூபாய் ஒழிப்பு முடிவாகும்.
மத்திய அரசின் இந்த முடிவால் நாடு தற்போது நேர்மை மற்றும் வெளிப்படை தன்மையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஊழலை சுவடு தெரியாமல் ஒழிப்பதே எங்களது கடமையாக இருக்கிறது.
இவ்வாறு மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.