செய்திகள்

குஜராத் ரசாயனத் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு: நான்கு பேர் பலி

Published On 2016-11-03 10:55 GMT   |   Update On 2016-11-03 10:55 GMT
குஜராத்தில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்ததால் பாதிக்கப்பட்ட நான்கு தொழிலாளர்கள் பலியாகினர். 13 பேர் காயமடைந்தனர்.
பரூச்:

குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் இயங்கி வந்த ரசாயன மற்றும் உரத் தொழிற்சாலையில் நேற்றிரவு திடீரென ரசாயன இயந்திரம் ஒன்று பழுதானது. இதனைத் தொடர்ந்து ரியாக்டரில் இருந்து போஸ்ஜீன் என்ற நச்சு வாயு கசிந்தது. அப்போது அந்த வாயுவை சுவாசித்த நான்கு தொழிலாளர்கள் மயங்கி விழுந்து இறந்தனர். 13 பேர் கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.

அவர்களை பரூச் நகரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்ததாகவும் அவர்களில் இரண்டு பேரை வதோரா பகுதி மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் போலீஸ் உயரதிகாரி சந்தீப் சிங் தெரிவித்திருக்கிறார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரை டிஸ்சார்ஜ் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து மாவட்ட தொழிற்சாலைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேசமயம், நிறுவனம் சார்பிலும் விசாரணை நடத்த உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த ரசாயன உரத் தொழிற்சாலையில் குஜராத் தடயவியல் நிபுணர்கள் இன்று சோதனை மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News