செய்திகள்

குழந்தைகள் சாகும்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணமா?: பிரதமர் மோடிக்கு 10 வயது சிறுவன் ‘சுருக்’ கடிதம்

Published On 2016-11-02 05:54 GMT   |   Update On 2016-11-02 05:54 GMT
ஒடிசா மாநிலத்தில் மூளைக் காய்ச்சலுக்கு 73 பேர் பலியாகியுள்ள நிலையில் நீங்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்வது நியாயமா? என்ற கேள்வியுடன் பிரதமர் மோடிக்கு பத்துவயது சிறுவன் எழுதியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிகமாக வாழும் மல்காங்கிரி மாவட்டத்திற்குட்பட்ட 500-க்கும் அதிகமான கிராமங்களில் ஜப்பான் மூளையழற்சி நோய் படுவேகமாக பரவி வருகிறது.

பெரும்பாலும் குழந்தைகளை அதிகமாக தாக்கும் இந்த நோய்க்கு இதுவரை 73 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மல்காங்கிரி மாவட்டம், சிகாப்பள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட போல்கன்டா பள்ளியில் நான்காம் வகுப்பில் படித்துவரும் உமேஷ் மாதி என்ற பத்துவயது சிறுவன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளான்.

அந்த கடிதத்தில் அவன் கூறியுள்ளதாவது:-

ஐயா, ஜப்பான் ஜுரத்துக்கு என்னுடைய நண்பர்கள் பலர் பலியாகி விட்டனர். உலகை சுற்றிவரும் நீங்கள் எங்கள் ஊருக்குவந்து, இங்கு குழந்தைகள் எப்படி சாகிறார்கள்? என்று பார்த்து எங்கள் உயிரை காப்பாற்ற வேண்டும்.

உலகின் பலநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் நீங்கள் எங்கள் கிராமத்தில் வசிக்கும் மக்களின் பரிதாப நிலையை பார்ப்பதற்காக இங்கு வரக்கூடாதா?

மேற்கண்டவாறு தனது கடிதத்தில் அவன் கூறியுள்ளான்.

Similar News