செய்திகள்

சித்தூர் அருகே கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டி கொன்ற மனைவி

Published On 2016-10-24 05:49 GMT   |   Update On 2016-10-24 05:49 GMT
சித்தூர் அருகே கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டி கொன்ற மனைவி. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் மீராசுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 35), கட்டிட மேஸ்திரி. அதே கிராமத்தைச் சேர்ந்தவர் சுவர்ணா (30). இருவருக்கும், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த ஆண்டு பெங்களூருவில் ஒரு பெரிய கட்டிடம் கட்டும் பணி நடந்தது. அதில் கணவன், மனைவி இருவரும் வேலை பார்த்தனர்.

அதே கட்டிடத்தில் சித்தூர் மாவட்டம் கலகடா மண்டலத்தைச் சேர்ந்த மது (24) என்பவர் சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். அப்போது மதுவுக்கும், சுவர்ணாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்களின் கள்ளக்காதல் விவகாரம் மகேசுக்குத் தெரிய வந்தது. அவர், தனது மனைவியை கண்டித்தார்.

இந்தநிலையில் கணவன், மனைவி இருவரும் பெங்களூருவில் வேலை செய்யாமல் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து விட்டனர். ஆனால் மதுவும், சுவர்ணாவும் அடிக்கடி செல்போனில் நீண்டநேரம் பேசி கள்ளக்காதலை தொடர்ந்தனர். சுவர்ணாவின் கள்ளக்காதலுக்கு கணவர் மகேஷ் இடையூறாக இருந்ததால், அவரை கொலை செய்ய சுவர்ணா சதித்திட்டம் தீட்டினார். அதற்கு மதுவை உதவிக்காக வைத்திருந்தார்.

மகேசிடம், நண்பர்போல் பழகிய மது தன்னுடைய சொந்த ஊருக்கு விருந்துக்காக வரும்படி அழைத்துள்ளார். அதன்படி மகேஷ் சித்தூர் கலகடாவுக்கு வந்தார். அவரை, மது பீளேருக்கு அழைத்துச் சென்று அளவுக்கு அதிகமாக மதுவை வாங்கி குடிக்க வைத்துள்ளார். போதை தலைக்கேறியதும் மகேசை, மது அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். தலையை தனியாக துண்டித்து பீளேரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் பின்பக்கத்தில் வீசினார்.

அதைத்தொடர்ந்து என்ஜினீயர் மது தனது கள்ளக்காதலியான சுவர்ணாவுடன் பீளேர் தாசில்தாரிடம் சரண் அடைந்தார். அவர், இருவரையும் போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார், இருவரையும் கைது செய்தனர். இதுதொடர்பாக பீளேர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News