செய்திகள்
ஜியோ இலவச வாய்ஸ் கால்களுக்கு டிசம்பர் 3 வரை மட்டுமே அனுமதி: டிராய்
ஜியோவின் இலவச வாய்ஸ் கால்களுக்கு டிசம்பர் 3-ம் தேதி வரையில் மட்டுமே அனுமதி என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்திய ஜியோ சிம், தொலைத்தொடர்பு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் 3 மாதங்களுக்கு இலவச அழைப்புகள், மாணவர்களுக்கு இணையப் பயன்பாட்டில் 25% கட்டணம், 1ஜிபி 4 ஜி டேட்டாவின் விலை 50 ரூபாய் மற்றும் ரோமிங் கட்டணம் முற்றிலும் ரத்து என ஏராளமான சலுகைகளை ஜியோ வழங்கியது.
இதனால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற நிறுவனங்கள் விற்பனையில் கடும் சரிவை சந்தித்தன. இதனால் ஜியோவின் இந்த அறிவிப்புகளை எதிர்த்து மற்ற நிறுவனங்கள் மேல் முறையீடு செய்தன. இதனை விசாரித்த டிராய், ஜியோவின் இலவச வாய்ஸ் கால் சலுகை டிசம்பர் 3 வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவித்துள்ளது.
ஜியோ வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் 75% அழைப்புகள் இணைக்கப்படுவதில்லை என்றும், இதற்கு மற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பின்மையே காரணம் எனவும் ரிலையன்ஸ் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.