செய்திகள்

பஞ்சாப் சட்டசபை தேர்தல்: சித்துக்கு துணை முதல்வர் பதவி - காங்கிரஸ் ரகசிய பேரம்

Published On 2016-10-20 06:30 GMT   |   Update On 2016-10-20 06:30 GMT
பஞ்சாப் சட்டசபை தேர்தலையொட்டி சித்துவை காங்கிரஸ் கட்சிக்கு இழுக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கவும் காங்கிரஸ் முன்வந்துள்ளது.
ஜலந்தர்:

பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. அங்கு அகாலி தளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. வரும் தேர்தலில் இந்த கூட்டணி நீடிக்கிறது.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஒரு அணியாகவும், ஆம் ஆத்மி கட்சி ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன.

காங்கிரஸ் கட்சி தனது பலத்தை அதிகரிக்க பல்வேறு யூகங்களை வகுத்து வருகிறது. அதன்படி முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவை இழுக்க முயற்சி நடக்கிறது. சித்து முன்பு பா.ஜனதாவில் இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினார். எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார்.

அவருடன் மனைவியும் பா.ஜனதாவில் இருந்து விலகினார். எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். பா.ஜனதாவில் இருந்து விலகிய சித்து ஆவாஸ்-இ-பஞ்சாப் என்ற மாநில கட்சியை தொடங்கியுள்ளார்.

சித்துவுக்கு துணை முதல்- மந்திரி பதவி வழங்கவும் சித்துவின் ஆதரவாளர்கள் 13 பேருக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கவும் காங்கிரஸ் முன் வந்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் வட்டாரத்தில் கேட்டபோது பஞ்சாப் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் சித்துவுக்கு மந்திரி சபையில் 2-வது இடம் வழங்கப்படும். இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

சித்துவும் அவரது ஆதரவாளர்களும் விரைவில் டெல்லி சென்று காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Similar News