செய்திகள்
தொழில்நுட்ப கோளாறு: ஏர் இந்தியா விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்
விஜயவாடாவில் இருந்து சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
புதுடெல்லி:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து இன்று காலை டெல்லிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அதில் 101 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் டெல்லியை நெருங்கியபோது என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார்.
இதையடுத்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார். இதுபற்றி டெல்லி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
அவர்கள் அனுமதி அளித்ததும் 11.20 மணியளவில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதனால், பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் எந்த பாதிப்பும் இன்றி பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.