செய்திகள்

ரோகித் வெமுலா தற்கொலைக்கு தனிப்பட்ட விரக்தியே காரணம்: விசாரணை அறிக்கையில் தகவல்

Published On 2016-10-06 11:06 GMT   |   Update On 2016-10-06 11:06 GMT
தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை அறிக்கையில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ரோகித் வெமுலா என்ற மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து, அவர் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டார் என கூறப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்று மத்திய மந்திரிகள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிரிதி இரானி ஆகியோர் பதவி விலக கோரி போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து ரோகித் வெமுலா தற்கொலை குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி அசோக் குமார் ரூபன்வால் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்தது. இந்த குழு விசாரணை நடத்தி 41 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அளித்துள்ளது.

அந்த அறிக்கையில், “ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா, சலுகைகள் பெறுவதற்காகவே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற சான்றிதழ் பெற்றுள்ளார். ஆவணங்களின்படி ராதிகா வடேரா சமுதாயத்தை சேர்ந்தவர். எனவே ராதிகா மற்றும் ரோகித் வெமுலாவிற்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என வழங்கப்பட்ட சான்றிதழ் உண்மையாக இருக்கும் என்பதில் சந்தேகம் உள்ளது. வெமுலா தற்கொலைக்கு பின்னணியில் அரசியல் அழுத்தமில்லை.

வெமுலா எழுதி வைத்த கடிதத்தில் அவரது தனிப்பட்ட கருத்துகள் கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களினால் விரக்தியில் இருந்தது கடிதம் மூலம் தெரியவந்துள்ளது. தனது கடிதத்தில் யாரையும் வெமுலா குற்றம்சாட்டவில்லை. பல்கலைக்கழகம் மீது கோபமிருந்திருந்தால், அவர் பற்றி ஏதேனும் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் அதனை அவர் செய்யவில்லை. இதன் மூலம் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவங்கள் வெமுலா தற்கொலைக்கு காரணமல்ல. தனிப்பட்ட விரக்தியே காரணமாக இருக்கலாம் என தெரிகிறது” என்று தெரிவிக்கபட்டுள்ளது.

Similar News