செய்திகள்

இரட்டைக் கொலை வழக்கில் ஜாமீன் ரத்து: மீண்டும் சிறைக்கு சென்றார் ஆர்.ஜே.டி தலைவர் ஷகாபுதீன்

Published On 2016-09-30 11:41 GMT   |   Update On 2016-09-30 11:41 GMT
இரட்டைக் கொலை வழக்கில், பீகார் மாநில ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முகமது ஷகாபுதீனின் ஜாமீன் மனு தள்ளுபடி ஆன நிலையில் அவர் மீண்டும் சிறைக்கு சென்றுள்ளார்.
பாட்னா:

பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர் முகமது ஷகாபுதீன் (48). கடந்த 2004-ஆம் ஆண்டு தொழிலதிபர்கள் சதீஷ்ராஜ் (25), கிரீஷ் ராஜ் (20) ஆகிய சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் இவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக முகமது ஷகாபுதீனுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிவான் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் ஷகாபுதீன் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி அவரை ஜாமீனில் விடுதலை செய்தது.

ஜாமீன் கிடைத்ததை அடுத்து, பகல்பூரி சிறையிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், இந்த ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் உடனடியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், முகமது ஷகாபுதீனின் ஜாமீனை இன்று ரத்து செய்து உத்தரவிட்டது. வழக்கின் உண்மைகள் மற்றும் பதிவான சாட்சிகளின் அடிப்படையில், பி.சி.கோஷ் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

மேலும் ஷகாபுதீனை உடனடியாக கைது செய்யுமாறும் பீகார் போலீசாரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து, சிவான் நீதிமன்றத்தில் ஆஜரான ஷகாபுதீன், பின்னர் அங்கிருந்து சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Similar News