செய்திகள்

விசாகப்பட்டினம் - அந்தமான் பயணிகள் கப்பல் நடுக்கடலில் கோளாறு: 506 பேர் தவிப்பு

Published On 2016-09-29 09:50 GMT   |   Update On 2016-09-29 09:50 GMT
விசாகப்பட்டினம்-அந்தமான் பயணிகள் கப்பலில் எந்திர கோளாறு ஏற்பட்டதையடுத்து அதில் பயணம் செய்த 506 பேர் நடுக்கடலில் சிக்கித் தவிக்கின்றனர்.
நகரி:

விசாகப்பட்டினத்தில் இருந்து அந்தமானின் போர்ட் பிளேருக்கு கடந்த 27-ந்தேதி மாலை எம்.வி. ஹர்‌ஷவர்தனா என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டது. அதில் 506 பயணிகளும், 60 ஊழியர்கள் இருந்தனர்.

14 நாட்டிகல் மைல் சென்றபோது நள்ளிரவில் கப்பலின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் கப்பல் நடுக்கடலில் நின்றது. எந்திர கோளாறை சரி செய்ய ஊழியர்கள் முயன்றனர்.

ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் நடுக்கடலில் பயணிகள் தவிக்கிறார்கள்.

அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் 3 நாட்களுக்கு மட்டுமே உள்ளது. இதனால் எந்திர கோளாறு எப்போது சரி செய்யப்படும் என்று கவலையில் பயணிகள் உள்ளனர்.

இதுபற்றி விசாகப்பட்டினம் கப்பற்படை அதிகாரிகள் கூறுகையில், ‘எந்திர கோளாறால் நடுக்கடலில் நிற்கும் கப்பலின் கேப்டனை தொடர்பு கொண்ட போது, என்ஜின் கோளாறை தாங்களே சரி செய்து விடுவதாக கூறி விட்டார்.

உணவு, தண்ணீர் மற்றும் கோளாறை சரி செய்யும் ஊழியர்களை அனுப்பும்படி கேட்டுக்கொண்டால் அதற்கு தயாராக இருக்கிறோம்’ என்றார்.

கப்பலில் சென்றவர்கள் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள் ஆவார்கள். அந்தமானில் வேலை செய்யும் அவர்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று விட்டு அந்தமான் திரும்பியபோது நடுக்கடலில் சிக்கி உள்ளனர்.

Similar News