உள்ளூர் செய்திகள்

'வாட்ஸ்-அப்'பில் ஸ்டேட்டஸ் வைத்து வாலிபர் தற்கொலை

Published On 2022-06-19 08:56 GMT   |   Update On 2022-06-19 08:56 GMT
  • தற்கொலை செய்த வாலிபர் காதல் திருமணம் செய்தவர்.
  • குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லையை அடுத்த தேவர்குளம் அருகே உள்ள முத்தையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது மகன் ரவிக்குமார்(வயது 29).

இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டத்தில் நூற்பாலை ஒன்றில் வேலை பார்த்தபோது அங்கு வேலை பார்த்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று ரவிக்குமார் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரவிக்குமார் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்ததோடு குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக தனது செல்போனில் 'வாட்ஸ்-அப்'பில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஸ்டேட்டஸ் வைத்துள்ளார் என்ற விபரம் தெரியவந்தது.

எனவே அவர் அதன் காரணமாக தான் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News