உள்ளூர் செய்திகள்

பேத்துப்பாறையில் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழைமரங்கள்.

கொடைக்கானலில் வாழைத் தோட்டங்கள், அவரை பந்தல்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

Published On 2022-06-25 04:58 GMT   |   Update On 2022-06-25 04:58 GMT
  • கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பேத்துப்பாறை கிராமத்தில் யானைகள் அட்டகாசம் தினமும் தொடர்ந்து வருகிறது.
  • வனத்துறை நிரந்த தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

கொடைக்கானல் :

கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பேத்துப்பாறை கிராமத்தில் யானைகள் அட்டகாசம் தினமும் தொடர்ந்து வருகிறது.ஒவ்வொரு நாளும் தங்களது விவசாயப்பயிர்களையும், உடைமைகளையும், உயிரையும் பாதுகாப்பதற்கு மட்டுமே நாட்களை கடத்த வேண்டி உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பள்ளிகளுக்கு சென்று வரும் தங்களது குழந்தைகள் நல்ல முறையில் திரும்பி வருவார்களா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.

வாழ்க்கையை வாழ்வதற்கே போராடும் சூழலில் வாழ்வாதாரத்தை காப்பதற்கு பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளதாக பேத்துப்பாறை கிராம மக்கள் மிகுந்த மன வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.அன்றாடம் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் முழுமையாக திருப்பிவிட வனத்துறை நிரந்த தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

தினசரி ஒவ்வொரு விவசாயிகளின் தோட்டத்தையும் சேதப்படுத்தி வரும் யானைக்கூட்டங்களால் பணப் பயிர்கள் முழுவதும் அழிந்து விடும் சூழல் உருவாகியுள்ளது. நேற்று மட்டும் கணபதி, வடிவேல், ரத்தினகுமார், தமிழன், சசி, பிரபு ஆகியோருடைய பல லட்ச ரூபாய் மதிப்பிலான அவரைப் பந்தல்களை மூன்று யானைகள் நாசம் செய்துள்ளன.

சேதமடைந்த பந்தல்களை மட்டும் சீரமைக்க சுமார் ரூ.2 லட்சம் செலவாகும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் பயிர்கள் விளைந்து அவற்றை பணமாக்குவது என்பதும் கேள்விக்குறிதான் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க உடனடியாக மாநில நிர்வாக அமைச்சர்களை தங்கள் பகுதிக்கு அனுப்பி ஆய்வு செய்து தங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News