உள்ளூர் செய்திகள்

திருச்சி விமான நிலைய ஓடுபாதையில் புகுந்த வாலிபர்

Published On 2022-06-24 09:42 GMT   |   Update On 2022-06-24 09:42 GMT
  • திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதையில் புகுந்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
  • மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா என்பது தெரியவந்தது

திருச்சி:

திருச்சி விமான நிலையம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு கடந்த பிறகே விமான நிலைய வளாகத்துக்குள் செல்ல முடியும்.

இந்த நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் திருச்சி விமான நிலைய ஓடுபாதையில் ஆள் நடமாட்டம் இருப்பதை அறிந்து அங்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அந்த பகுதியில் உலாவி வந்தது தெரியவந்தது. அந்த நபர் புதிய முனைய கட்டுமான பணி நடைபெறும் பகுதி வழியாக விமான நிலையத்திற்குள் சென்றதாக தெரிய வந்துள்ளது.

இதனை அறிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா என்பது தெரியவந்தது. இவர் சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திலிருந்து அப்துல்லா செம்பட்டு பகுதியிலுள்ள மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்தில் ஒப்படைக்க ஆவண செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News