உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் அருகே டாஸ்மாக் மதுபான குடோன் முன்பு தொழிலாளர்கள் போராட்டம்

Published On 2023-03-11 06:38 GMT   |   Update On 2023-03-11 06:38 GMT
  • லாரி டிரைவர், உதவியாளர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், சுமை இறக்கும் தொழிலாளர்கள் என 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
  • காஞ்சிபுரம் தமிழ்நாடு வாணிபக் கழக டாஸ்மாக் குடோன் முன்பு ஒரு மணி நேரத்துக்கு மேலாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் அரசு டாஸ்மாக் குடோன் உள்ளது. மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து எடுத்து வரப்படும் மதுபான பாட்டில்கள் இங்கிருந்து வாகனங்கள் மூலம் அரசு மதுபானக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

காஞ்சிபுரம் கிழக்கு பகுதியில் மட்டும் சுமார் 110 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதில் படப்பை, வாலாஜாபாத், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகளில் மதுபானங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த டாஸ்மாக் குடோனில் இருந்து பொருட்களை ஏற்றி செல்ல 15 ஆண்டுகளாக உள்ளூர் நிறுவனம் ஏலம் எடுத்து நடத்தி வந்தது. இந்த ஆண்டு வேறு ஒரு வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் இன்று முதல் வேலை இருக்காது என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தில் லாரி டிரைவர், உதவியாளர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், சுமை இறக்கும் தொழிலாளர்கள் என 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். திடீரென்று வேறு நிறுவனத்துக்கு டெண்டர் மாறியது காரணமாக பணி வழங்கப்படாது என நினைத்து காஞ்சிபுரம் தமிழ்நாடு வாணிபக் கழக டாஸ்மாக் குடோன் முன்பு ஒரு மணி நேரத்துக்கு மேலாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த டாஸ்மாக் அதிகாரிகள் இன்று அவர்களுக்கு வழக்கம் போல் வேலை வழங்கியதால் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News